புதியவை :

Grab the widget  Tech Dreams

11 பிப்ரவரி 2010

ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் விலை பட்டியல் !



அனுமதி சீட்டு வாங்க - 1 ரூபாய்

பாம்புக்கடி - நாய்க்கடிக்கு - 100 ரூபாய்

வெட்டு காயங்களுடன் வந்தால் - 300 ரூபாய்

ஆண் குழந்தை பிறந்தால் - 500 ரூபாய்

பெண் குழந்தை பிறந்தால் - 400 ரூபாய்

நோயாளி அட்மிட் - 100 ரூபாய்


இவ்வாறு பணம் கொடுத்தால்தான் முறையான கனிவான சிகிச்சை நடக்கும் !
இல்லாத பட்சத்தில் வேதனையோடு துடிக்க வேண்டியது தான்.



அரசு ஆஸ்பத்திரிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர். இந்த சோதனையில் ஏழை நோயாளிகளிடம் எந்த, எந்த நோய்க்கு எவ்வளவு காசு என விலை நிர்ணயப்பட்டியல் போட்டு வசூலித்த விஷயம் அம்பலமாகியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரியை நம்பி கோடிக்கணக்கான ஏழை நோயாளிகள் உள்ளனர். தனியார் ஆஸ்பத்திரி பக்கமே போகாதவர்களும் உண்டு என்ற நிலை இன்று வரை தமிழகத்தில் உள்ளது.

இப்படி நம்பி வரும் நோயாளிகளிடம் லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்வது, நோய்த்தாக்கத்தை விட கொடிய வேதனையை தந்தது. இந்த விஷயம் குறித்து வெளியே சொல்ல அஞ்சியபடி நோய் குணமானால் சரிப்பா என ஆஸ்பத்திரிக்கு புறப்படும்போது கையில் பணத்தை எடுத்து கொண்டு சென்றனர். இந்த விஷயம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு எட்டியது. இதனையடுத்து சேலம் மதுரை உள்ளிட்ட மாவடங்களில் சில குறிப்பிட்ட அரசு ஆஸ்பத்தரிக்கு குறி வைக்கப்பட்டது. இதன்படி சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் காலை அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு துறை டி. எஸ்.பி., பன்னீர்செல்வம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், ரங்கராஜன் மற்றும் 17 போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். காலையில் வந்த அதிகாரிகள் நோயாளி போல பாசாங்கு செய்தபடி வந்தனர். முதலில் அனுமதி சீட்டு வாங்க சென்றபோது ஒரு ரூபாய் கொடு என அதிகாரி தோரணையில் கம்பவுண்டர் கேட்க அதிகாரியும் நூறு ரூபாயாக இருக்கிறது என்றதும் இந்த 99 ரூபாய் பிடி என கொடுக்க அடுத்த நபரிடம் 1 ரூபாய்க்கு கை நீட்ட சிக்கினர் ஆஸ்பத்திரி ஊழியர்கள் தங்கவேல், முருகன். அடுத்தபடியாக பிரசவ வார்டுக்கு சென்றனர். அங்கு அதிரடி ரெய்டில் வளர்மதி, சிவகாமி, சீதாலட்சுமி சிக்கினர். இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது போல மதுரை மாவட்டம் திருமங்கலம், உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்தரியிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் எந்த நோய்க்கு எவ்வளவு விலை நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது என்ற விவரம் தற்போது வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது. இதன் படி அய்யா பாம்புக்கடிக்கு - 100ரூபாய், நாய்க்கடித்தால் - 100 ரூபாய், வெட்டு காயங்களுடன் வந்தால் - 300 ரூபாய், பிரசவ வார்டில் கொடுமையோ, கொடுமை. லஞ்சம் உச்சக்கட்டத்தில் எகிறி குதித்திருக்கிறது. இங்கு ஆண் குழந்தை பிறந்தவுடன் இங்கு இருக்கும் நர்சுகளுக்கு 500 ரூபாய் கட்டியாக வேண்டும், பெண் குழந்தையாக இருந்தால் ஒரு நூறை குறைத்து 400 ரூபாய். எந்த நோயாளியாக இருந்தாலும் அட்மிட் ஆகும் போது 100 ரூபாய் செலுத்தியாக வேண்டும்.

இவ்வாறு பணம் கொடுத்தால்தான் முறையான கனிவான சிகிச்சை நடக்கும். இல்லாத பட்சத்தில் நாய்க்கடி வேதனையோடு துடிக்க வேண்டியது தான். ஆஸ்பத்தரியில் சோதனை நடத்தப்பட்டதும், சில நோயாளிகள் தாங்களாகவே முன்வந்து புகாரை பதிவு செய்துள்ளனர். அரசு ஆஸ்பத்திரியில் நடந்த கட்டண சிகிச்சை அக்கம் பக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-----------------------------------------------------------------------------------------------

ஸ்டான்லி மருத்துவமனையில், நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களிடம் அடாவடியாக வசூலிப்பதாக பல புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மாவட்ட ஆய்வுக் குழும அலுவலர் மோகன் மேற்பார்வையிலான குழு, சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில், நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டது. இச்சோதனை, காலை 12 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்தது. இது குறித்து, டி.எஸ்.பி., அலிபாஷா கூறுகையில், "மருத்துவமனையின் அனைத்து வார்டுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில், வார்டில் இருந்த மூன்று ஊழியர்களிடம் இருந்து கணக்கில் வராத 2,240 ரூபாய் பறிமுதல் செய்யபட்டது. இது தொடர்பாக, மூன்று ஊழியர்களை எச்சரித்துள்ளோம். இந்த சோதனையில், யாரும் கைது செய்யப்படவில்லை' என்றார்.

----------------------------------------------------------------------------------------------

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் பணம் வசூல் செய்வதாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, நேற்று காலை 10 மணிக்கு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வுக்குழு துணைத் தலைவர் சேகர் தலைமையில், போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். சீட்டு வழங்கும் இடத்தில் 810 ரூபாயும், கட்டு கட்டுமிடத்தில் 400 ரூபாயும், பிரசவ வார்டில் இருந்து ஆயிரத்து 400 ரூபாய் என மொத்தம் 2,610 ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.

-----------------------------------------------------------------------------------------------

உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், லஞ்ச தடுப்பு போலீசார் நடத்திய சோதனையில், மூன்று நர்சுகளிடம் இருந்து 13 ஆயிரத்து 60 ரூபாய் சிக்கியது. பிரசவ வார்டு, மருந்து கட்டுமிடம், உள்ளிட்ட பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். தலைமை நர்ஸ் சரஸ்வதியிடம் 360 ரூபாய், உதவி தலைமை நர்ஸ் பிரேமாமேரியிடம் 11 ஆயிரத்து 300 ரூபாய், நர்ஸ் ராஜகுமாரியிடம் 1,400 ரூபாய் இருந்தது. இவர்களிடம் இந்த பணம் எப்படி வந்தது என, விசாரணை நடத்தினர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக