புதியவை :

Grab the widget  Tech Dreams

05 பிப்ரவரி 2010

சென்னை,மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் அதிரடி சோதனை.



மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரையடுத்து, சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் உதவி பாஸ்போர்ட் அதிகாரி உட்பட 4 பேரும், சென்னையில் நடைபெற்ற அதிரடி சோதனையில் 3 பேரும் என 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போட்டிற்காக விண்ணப்பம் செய்பவர்களிடம் லஞ்சம் கேட்பதா கவும், லஞ்சம் கொடுக்காதவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுவதில்லை என்றும், பொதுமக்களிடமிருந்து அரசுக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் சத்தியமூர்த்தி, அன்பழகன் ஆகியோர் தலைமையில் சிபிஐ போலீசார் நேற்று மதுரையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனைக்குப்பிறகு உதவி பாஸ்போர்ட் அதிகாரி கீதா பாய் (வயது 58) என்பவரை தல்லாக்குளத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணைக்கு பின்னர், பாஸ்போர்ட் அதிகாரி கீதாபாயை, கே.புதூர் ஆவின் நகர் சர்வேயர் காலனியில் உள்ள அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கணக்கில் காட்டப் படாத ரூ.2 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, உதவி பாஸ்போர்ட் அதிகாரி கீதாபாய் மற்றும் அவருக்கு லஞ்சம் வாங்கிக் கொடுத்து உதவியதாக அதே அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் துரைராஜ் (வயது 51), அன்பழகன் (வயது 57) மற்றும் புரோக்கர் இப்ராஹிம்மீரான் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் இன்று சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் நேற்று நடந்த சோதனையின் போது, கிடைத்த முக்கிய தகவலின்படி, இங்கும் சோதனை நடந்தது.இதில் பாஸ்போர்ட் அலுவலக சூப்பிரண்டுகள் இரண்டு பேர் மற்றும் புரோக்கர் ஒருவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக