புதியவை :

Grab the widget  Tech Dreams

16 ஆகஸ்ட் 2010

ரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர்கள் இருவர் கைது

திருநெல்வேலி : நிலத்தை பிரித்து தனிப்பட்டா கொடுக்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். பாளையங்கோட்டையில் வசிப்பவர் பிலிப் பெர்க்மான்ஸ்(60). அரசு போக்குவரத்து நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி பெயரில் பாளை.,கிருஷ்ணாபுரத்தில் உள்ள 20 சென்ட் நிலத்தை மகன் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்தார். அதற்காக தனிப்பட்டா கோரி பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் விண்ணப்பித்திருந்தார். அந்த பணியினை மேற்கொள்ளவேண்டிய தலைமை சர்வேயர் வின்சென்ட்(57), சிவந்திப்பட்டி பிர்கா சர்வேயர் சிக்கந்தர் முகைதீன்(56) ஆகியோர் 3 மாதங்களாக வேலையை முடிக்காமல் இழுத்தடித்தனர். பிலிப் கேட்டபோது 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தந்தால்தான் காரியம் நடக்கும் என்றார்கள். லஞ்சம் தர விரும்பாத பிலிப், நெல்லை லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி., மனோகரகுமாரிடம் புகார் செய்தார். இன்று மாலையில் பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் இருந்தபோது பிலிப் கொடுத்த பணத்தை வாங்கிய சர்வேயர்கள் இருவரையும் டி.எஸ்.பி.,தலைமையிலான போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களது வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

பட்டா மாற்ற ரூ.4 ஆயிரம் லஞ்சம் :திண்டிவனத்தில் வி.ஏ.ஓ., கைது

திண்டிவனம் :பட்டா மாற்றம் செய்ய, 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., திண்டிவனத்தில் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா பெரியதச்சூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கிருஷ்ணன்(31). இவர், கடந்த நான்கு மாதங்களுக்கு முன், நிலம் விலைக்கு வாங்கினார். அந்த நிலத்தின் பட்டாவிற்கு பெயர் மாற்றம் செய்ய, வி.ஏ.ஓ.,விடம் மனு செய்தார்.பெரியதச்சூர்(வடக்கு) வி.ஏ.ஓ., திருவேங்கடம் பட்டா மாற்றம் செய்வதற்கு 6,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். பின்னர் 4,000 ரூபாய் தர வேண்டுமென கூறியுள்ளார்.இது குறித்து கிருஷ்ணன் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கிருஷ்ணனிடம் கொடுத்து அனுப்பினர். இந்த பணம் 4,000 ரூபாயையும் கிருஷ்ணன் மாலை 6.45 மணிக்கு திண்டிவனம் தாலுகா அலுவலகத்திலிருந்த வி.ஏ.ஓ., திருவேங்கடத்திடம் கொடுத்தார்.அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் ஏட்டுகள் ஜீவா, பாலு, அஷ்டமூர்த்தி, சுரேஷ், முருகானந்தம் உள்ளிட்ட குழுவினர் திருவேங்கடத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட திருவேங்கடம், 2008ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

10 ஆகஸ்ட் 2010

கற்பழிப்பு புகார் விசாரிக்க லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர்

சேலம்: சேலத்தில் ஆசை வார்த்தை கூறி இளம்பெண் கற்பழிக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய போலீஸ் இன்ஸ்பெக்டர் லஞ்சம் கேட்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, எஸ்.பி.,யிடம் கண்ணீர் புகார் அளித்தார்.ஆத்தூர் இலந்தவாரி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சிங்காரம். அவர் நேற்று சேலம் மாவட்ட எஸ்.பி.,யிடம் கண்ணீருடன் மனு அளித்தார்.அதில், என் மகள் மகாலட்சுமி (17). அவரை கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி, அதே பகுதியில் வசித்து வரும் வெள்ளி மகன் ராஜா ஆசை வார்த்தை கூறி, கடத்தி சென்று கற்பழித்தார். எனது மகள் கடத்தப்பட்டதை அறிந்த நான், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இறுதியாக மகாலட்சுமியை ஆகஸ்ட் 6ம் தேதி ராஜா வீட்டில் இருந்து மீட்டு வந்தேன். எனது மகள் கற்பழிக்கப்பட்டதை அறிந்த நானும், எனது உறவினர்களும் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி தலைவாசல் போலீஸில் புகார் அளிக்க சென்றேன். புகார் மனுவை பதிவு செய்யவும், விசாரிக்கவும் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் புரு÷ஷாத்தமன், ஏட்டு ராமசாமி கேட்டனர்.


ராஜாவின் நண்பனான ஆதியின் உறவினர் தலைவாசல் போலீஸ் ஏட்டு என்பதால், அவர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு ஏட்டுவும், இன்ஸ்பெக்டரும் தற்போது அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர். என் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க அவர்களை விட லஞ்சம் அதிகமாக கொடுக்க வேண்டும் என்று எங்களை வற்புறுத்துகின்றனர். எனது மகளை சீரழித்த ராஜா மீதும், லஞ்சம் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்க மறுக்கும் இன்ஸ்பெக்டர் புரு÷ஷாத்தமன், ஏட்டு ராமசாமி மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவித்துள்ளார்.



07 ஆகஸ்ட் 2010

அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கி இதுவரை கைதானவர்கள் 500 பேர்! போட்டோக்களை வெளியிட அரசு முடிவு


தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்தி வரும் அதிரடி வேட்டையில், 500க்கும் மேற்பட்ட லஞ்ச அதிகாரிகள் கையும், களவுமாக பிடிபட்டுள்ளனர்.


லஞ்ச அதிகாரிகளை பொறி வைத்து பிடிப்பதில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனி கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும், அரசு அலுவலகங்களில் லஞ்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, லஞ்சம் வாங்கி சிக்குபவர்களின் தகவல்களை, புகைப்படத்துடன் இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


"லஞ்சம் கொடுப்பதும் குற்றம்; வாங்குவதும் குற்றம்' என, அனைத்து அரசு அலுவலகங்களிலும் எழுதப்பட்டிருக்கும். ஆனால், லஞ்சம் இல்லாமல் அரசு அலுவலகங்களில் எந்தவொரு வேலையும் நடக்காது என்ற நிலை உருவாகிவிட்டது. இந்த வேலையை முடிக்க இவ்வளவு பணம் என்று அறிவிப்பு பட்டியல் வைக்காத குறையாக லஞ்சம் தாண்டவமாடுகிறது. அரசு அலுவலகங்களில் சாதாரண உதவியாளர் முதல் தலைமையிட உயர் அதிகாரிகள் வரை லஞ்சம் வாங்காதவர்களே இல்லை என்ற நிலை காணப்படுகிறது.


இந்நிலையில், அரசு அலுவலகங்களில் தலை தூக்கியுள்ள லஞ்ச, லாவண்யங்களை ஒடுக்க தமிழக அரசு களம் இறங்கியுள்ளது. இது தொடர்பான அரசின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தீவிரமாக களமிறங்கினர். இதன் பயனாக தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், இதுவரை லஞ்சத்தில் புரண்டு வந்த சாதாரண ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை 500க்கும் மேற்பட்டோர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர்.


கடந்த 2007-08ம் ஆண்டில் 127 பேர், 2006-07ம் ஆண்டில் 131 பேர், 2005-06ம் ஆண்டில் 136 பேர் என சராசரியாக 100 முதல் 150 பேர் வரை போலீஸ் பிடியில் கையும், களவுமாக சிக்கியுள்ளனர். இந்த வகையில், கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2009ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பல்வேறு புகார்களின் அடிப்படையில், 312 வழக்குகளில் அதிகாரிகள் லஞ்சம் பெறும் போது, போலீசார் பொறி வைத்து பிடித்துள்ளனர்.கடந்த 10 ஆண்டுகளில் ஒப்பிடும் போது இது மூன்று மடங்கு அதிகம். லஞ்சத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் லஞ்ச வழக்கில் சிக்கும் அதிகாரிகளின் தகவல்களை புகைப்படத்துடன், இணையதளத்தில் வெளியிட தற்போது அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் 5,186 லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 1,527 வழக்குகளில் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறும் போது, கையும், களவுமாக போலீசார் கைது செய்துள்ளனர். இதைத் தவிர 1,028 வழக்குகள் ஆரம்ப நிலையிலும், 1,739 வழக்குகள் விரிவான விசாரணையிலும், 892 வழக்குகள் ரெகுலராகவும் நடந்து வருகின்றன. கடந்த 2008ம் ஆண்டு மார்ச் வரை எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், கோர்ட் நிலுவையில் இருந்த 877 லஞ்ச வழக்குகளில், 1,866 அரசு அலுவலர்களிடமும், தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருந்த 385 வழக்குகளில், 1,182 பேரிடமும், துறை ரீதியாக நிலுவையில் உள்ள 4,662 வழக்குகளில், 3,546 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவற்றில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் தற்போதும் விசாரணை அளவிலேயே உள்ளன.


தண்டனை நிச்சயம் :லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் சிக்குவார்களே தவிர, அவர்கள் மீது நடவடிக்கை இருக்காது என்ற கருத்து தற்போது நிலவுகிறது. ஆனால், லஞ்ச அதிகாரிகளுக்கு தண்டனை நிச்சயம் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். "தமிழகம் முழுவதும், 2008-09 ஆண்டில், பல்வேறு கோர்ட்டுகளில் நடந்து வரும் பல்வேறு லஞ்ச வழக்குகளில் 40 வழக்குகளுக்கு இதுவரை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பலருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.கோவை மாநகராட்சி ஜூனியர் இன்ஜினியர் ஒருவருக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 62 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பல வழக்குகளில் குறைந்தபட்சம் ஆறு மாதம் முதல் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது' என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

06 ஆகஸ்ட் 2010

லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது


ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பை குறைத்து பத்திரப் பதிவு செய்ய ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நெமிலியைச் சேர்ந்தவர் அன்பழகன்(45). இவர், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கடுவஞ்சேரி பகுதியில் வீட்டுமனை வாங்கியுள்ளார். பத்திரப் பதிவு செய்வதற்காக ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகம் சென்றார். அங்கு சார்பதிவாளராக உள்ள தர்மபுரியைச் சேர்ந்த சுரேஷ்(47) என்பவரை சந்தித்தார். அவர், இடத்தின் மதிப்பை அதிகமாகக் கூறிவிட்டு குறைந்த மதிப்பிற்கு பத்திரப்பதிவு செய்து தர ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத அன்பழகன் நேற்று காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் போலீசில் புகார் செய்தார். போலீஸ் டி.எஸ்.பி., விஜயராகவன், இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வன், கங்காதரன், சரவணன், வெங்கடேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர். பின், ரசாயனம் தடவிய ஐந்தாயிரம் ரூபாய் நோட்டுகளை அன்பழகனிடம் கொடுத்து சார்பதிவாளரிடம் கொடுக்கும்படி அனுப்பினர். அவர், பணத்துடன் நேற்று மாலை 4 மணிக்கு ஸ்ரீ பெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகம் சென்றார். அங்கு சார்பதிவாளர் சுரேசை சந்தித்து பணத்தை கொடுத்தார். அவரும் பெற்றுக் கொண்டார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சுரேசை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், கடந்த மூன்று வருடங்களில் ஐந்து முறை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்துள்ளனர். நடப்பான்டில் இது வரை இரண்டு முறை சோதனை நடத்தியுள்ளனர். சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் நிலத்தின் வழிகாட்டி மதிப்பை அதிகப்படுத்தி கூறுகின்றனர். பின், குறைத்து பத்திரப்பதிவு செய்வதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்டு அரசு வழிகாட்டி மதிப்பிற்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்கின்றனர். விவரம் புரியாமல் மக்களும் பணத்தை கொடுத்து ஏமாறுகின்றனர்.

லஞ்சம், மது, கள்ளக்காதல் விவகாரம் எஸ்.ஐ., ஏட்டு மூவர் "சஸ்பெண்ட்'

எழுமலை: மதுரையில் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., கள்ளக்காதலியை தாக்கிய ஏட்டு, மது போதையில் சாலையில் உருண்டு கிடந்த ஏட்டு ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


மதுரை மாவட்டம் எழுமலை போலீஸ் எஸ்.ஐ., சீனிவாசன். வழக்கு ஒன்றில் சிலரை கைது செய்யாமல் இருக்க, லஞ்சம் வாங்கியபோது பிடிபட்டார். கோர்ட் உத்தரவுப்படி, எஸ்.ஐ., ரிமாண்ட் செய்யப்பட்டார். அவருக்கு பக்கபலமாக இருந்து லஞ்சம் வசூலித்து கொடுத்த ஏட்டு சின்னசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.


மேலூர் ஏட்டு பாலசுப்பிரமணியன். இவர் நேற்று முன்தினம் பணியின் போது, பட்டப்பகலில் மது போதையில் சாலையில் உருண்டு கிடந்தார். அதிர்ச்சியடைந்த மக்கள் போலீஸ் ஸ்டேஷனில் தகவல் கொடுத்தனர். அவரை அப்புறப்படுத்திய போலீசார், ஏட்டு போதையில் இருந்தது குறித்து எஸ்.பி., மனோகருக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.

சாப்டூர் ஏட்டு ரவி. இவர், கள்ளக்காதலியை அடித்து, உதைத்தாக வரப்பட்ட புகார் தொடர்பாக தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தினர். எஸ்.ஐ., சீனிவாசன், ஏட்டுகள் பாலசுப்பிரமணியன், ரவி, சின்னசாமி ஆகியோர் மீதான புகார்கள் தொடர்பாக எஸ்.பி., மனோகர் விசாரணை நடத்தினார். அவரது பரிந்துரைப்படி, சீனிவாசன், பாலசுப்பிரமணியன், ரவி, சின்னசாமி ஆகியோரை சஸ்பெண்ட் செய்தும், பணிக்கு சரியாக வராத ஒத்தக்கடை சிறப்பு எஸ்.ஐ., சுப்பிரமணியன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தும், டி.ஐ.ஜி., சந்தீப்மித்தல் உத்தரவிட்டார்

ரூ.2,000 லஞ்சம்: டாஸ்மாக் அதிகாரிகள் இருவர் கைது

விருதுநகர்: விருதுநகரில் 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் உதவி மேலாளர் செல்வம், மேற்பார்வையாளர் ஜெகநாதனை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.


ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் டாஸ்மாக் கடை விற்பனையாளராக இருந்த ராமகிருஷ்ணன். பீர் பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் கூடுதலாக வாங்கியது தொடர்பாக, இவரை மாவட்ட மேலாளர் செம்புக்குட்டி சஸ்பெண்ட் செய்தார். மீண்டும் தன்னை பணியில் சேர்க்கக் கோரி, விருதுநகரிலுள்ள டாஸ்மாக் அலுவலகத்துக்கு நேற்று மதியம் ராமகிருஷ்ணன் வந்தார். அவரை அணுகிய உதவி மேலாளர் செல்வம்(54), 2,000 ரூபாய் கேட்டார். இது குறித்து ராமகிருஷ்ணன், விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.


போலீசார் ரசாயனம் தடவிக் கொடுத்த 2,000 ரூபாயை நேற்று மாலை 6 மணியளவில் டாஸ்மாக் அலுவலகத்திலிருந்த செல்வத்திடம் கொடுத்தார். அவர் பணத்தை வாங்காமல், அங்கு வேலைபார்க்கும் சிவகாசி பார் மேற்பார்வையாளர் ஜெகநாதனிடம்(39) கொடுக்கச் சொன்னார். ராமகிருஷ்ணனும், ஜெகநாதன் இருந்த அறைக்குச் சென்று அவரிடம் பணத்தை கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சியாமளாதேவி, இன்ஸ்பெக்டர்கள் சாமிநாதன், கணேஷ்தாஸ் ஆகியோர் பணத்தைக் கைப்பற்றினர். உதவி மேலாளர் செல்வம், மேற்பார்வையாளர் ஜெகநாதன் இருவரையும் கைது செய்தனர்.

ரூ.3,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் நகராட்சி சுகாதார அதிகாரி கைது.


திருவாரூர்: தனியார் துப்புரவுப் பணி கான்ட்ராக்டரிடம் 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய திருவாரூர் நகராட்சி அதிகாரி கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம் கிடாரங்கொண்டானைச் சேர்ந்தவர் மயில்வாகனன்; தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக எழுத்தர். அரசு பணியில் இருக்கும் இவர், கிடாரங்கொண்டான் கவுன்சிலராகவும் இருந்தார். நகர மன்றத்தில் எதிர்ப்பு வலுத்ததால், கடந்த இரு மாதங்களுக்கு முன் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார். இவர் கவுன்சிலராக இருந்த போது, நகராட்சி பகுதியில் துப்புரவுப் பணியை ஸ்ரீ மாதா டெவலப்மென்ட் சோஷியல் சர்வீஸ் என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்தம் பெற்று செய்து வந்தார்.


திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்தவர் ராஜா. இவர், திருவாரூர் நகராட்சியில் சுகாதாரப் பிரிவு அதிகாரியாக இருந்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன், திருநெல்வேலியில் இருந்து திருவாரூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதே பிரிவில் சுகாதார ஆய்வாளராக திண்டுக்கல் பழனிச்சாமி இருந்தார். இவர், சென்னைக்கு கடந்த மாதம் இடமாறுதல் செய்யப்பட்டார். இருவரும், துப்புரவுப் பணியாளர் மாத சம்பளம் செக் வழங்க, ஒவ்வொரு மாதமும், தனியார் துப்புரவு நிறுவனத்திடம் 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கினர். இதை முன்னாள் கவுன்சிலரும், நுகர்பொருள் வாணிபக் கழக எழுத்தருமான மயில்வாகனன், நாகை லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் செய்தார்.


அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், திருவாரூர் நகராட்சியை கண்காணித்து வந்தனர். நேற்று மதியம் அலுவலகத்தில் இருந்த சுகாதார அதிகாரி ராஜாவிடம், துப்புரவு தனியார் நிறுவன கான்ட்ராக்டர் மயில்வாகனன், பழனிச்சாமிக்கு சேரவேண்டிய ரூபாயும் சேர்த்து 3,000 ரூபாய் லஞ்சமாக கொடுத்துள்ளார். இதை ராஜா வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். ராஜாவிடம் இருந்த பணத்தை சோதனை செய்த போது, அதில் ரசாயன பவுடர் தடவியதும், ராஜா கைரேகையும் பதிவாகியிருந்தது. மயில்வாகனன் கொடுத்த புகாரின் பேரில், நாகை லஞ்ச ஒழிப்பு போலீசார், திருவாரூர் நகராட்சி சுகாதார அதிகாரி ராஜா 2,000 ரூபாய், சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக வழக்கு பதிவு செய்து, திருவாரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பால்ராஜ், லஞ்சம் வாங்கிய நகராட்சி அதிகாரியை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

நிலக்கோட்டை பத்திர பதிவு அலுவலக தலைமை எழுத்தர் கைது.


நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் லஞ்சம் வாங்கிய பத்திர பதிவு அலுவலக தலைமை எழுத்தரை போலீசார் கைது செய்தனர்.


திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள மாலைய கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி(35). இவர், நிலக்கோட்டை சார்-பதிவாளர் அலுவலகத்தில், இரண்டு மாதங்களுக்கு முன்பு புதியதாக வாங்கிய நிலத்திற்கு பத்திரம் பதிவு செய்தார். ஒரு வாரத்திற்குப் பின், பதிவு செய்த பத்திரத்தை திருப்பித் தருமாறு தலைமை எழுத்தர் ராஜ்குமாரிடம்(48) கேட்டார். அவர், பத்திரத்தை தருவதற்கு 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தருமாறு கேட்டார். ராமமூர்த்தி, திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். நேற்று ராமமூர்த்தி, தலைமை எழுத்தர் ராஜ்குமாரிடம் 15 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார், ராஜ்குமாரை கைது செய்தனர்.

வரதட்சணை கேட்பது குற்றமல்ல - சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு .


புதுடெல்லி, ஆக. 6

வரதட்சணை கேட்பது குற்றமல்ல என்றும் அது கிடைக்காதபட்சத்தில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தினால் மட்டுமே குற்றமாகும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அமர்சிங். இவரது மனைவி பெயர் சந்தோஷ். இவர் கடந்த 93ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கொடுமை காரணமாக சந்தோஷ் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அமர்சிங், அவரது சகோதரர் மற்றும் தாயார் ஆகியோர் குற்றவாளிகள் என கீழ் கோர்ட் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து 3 பேரும் ராஜஸ்தான் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். அப்பீல் வழக்கை விசாரித்த ஐகோர்ட், அமர்சிங்கின் தாயார் மற்றும் சகோதரரை விடுதலை செய்தது. அமர்சிங்குக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது.

அமர்சிங்கின் தாயார் மற்றும் சகோதரர் விடுதலையை எதிர்த்து போலீஸ் தரப்பிலும், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அமர்சிங்கும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். அப்பீல் மனுவில், ‘மனைவி வீட்டாரிடம் ஒரு ஸ்கூட்டர் வாங்கித் தருமாறு கேட்டது உண்மைதான். அவர்கள் வாங்கித் தரவில்லை. அதற்காக என் மனைவியை நான் எந்தவகையிலும் வற்புறுத்தவோ, கொடுமைப்படுத்தவோ இல்லை’ என்று அமர்சிங் கூறியிருந்தார்.


வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.எம்.லோதா மற்றும் ஏ.பி.பட்நாயக் ஆகியோர், “அமர்சிங் ஸ்கூட்டர் கேட்ட விஷயம் இரண்டு சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்காக அவர் மனைவியை கொடுமைப்படுத்தினார் என்பது சாட்சிகளின் மூலம் நிரூபிக்கப்படவில்லை. வரதட்சணை கேட்பது குற்றமாகாது. அது கிடைக்காத பட்சத்தில் மனரீதியாகவோ, உடல் ரீதியாகவோ கொடுமைப்படுத்தினால்தான் குற்றமாகும். இந்த கொடுமையின் காரணமாக மனைவி இறந்தால் அது தகுந்த சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட வேண்டும். அதனால், அமர்சிங்கை விடுதலை செய்கிறோம்” என தீர்ப்பளித்தனர்.

வரதட்சணை கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம் என வரதட்சணை எதிர்ப்பாளர்கள் பிரசாரம் செய்து வரும் வேளையில் வெறுமனே வரதட்சணை கேட்பது குற்றமாகாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


05 ஆகஸ்ட் 2010

ஊழலை காட்டிக் கொடுப்பவரை காப்பாற்ற மத்திய அரசு புது சட்டம்

கொலை செய்யப்பட்டதேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சத்யேந்திர துபே


புதுடெல்லி, ஆக. 5


மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் நடைபெறும் ஊழல்களை காட்டிக் கொடுக்கும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை மத்திய அமைச்சரவை இன்று பரிசீலனை செய்கிறது.
அரசுத் துறை மற்றும் நிறுவனங்களில் நடைபெறும் ஊழல்களை காட்டிக் கொடுப்பவர்கள் பெரும்பாலும் உயர் அதிகாரிகளால் பழிவாங்கப்படுவதுண்டு. சில சமயம் ஊழல் புரிந்தவர்களின் நேரடி தாக்குதலுக்கு ஆளாவதும் உண்டு. இதனால் ஊழல் நடப்பது தெரிந்தும் அவற்றை வெளிப்படுத்த யாரும் முன்வருவதில்லை. இந்நிலையில் ஊழலை காட்டிக் கொடுப்பவர்களை காப்பாற்ற மத்திய அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதற்கான மசோதா இன்று டெல்லியில் கூடும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படுகிறது.


இந்த புதிய சட்டப்படி ஊழலை காட்டிக் கொடுப்பவர்களை பாதுகாக்கும் பொறுப்பு மத்திய ஊழல் தடுப்பு கமிஷன் வசம் ஒப்படைக்கப்படுகிறது. காட்டிக் கொடுத்தவர் மீது பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க இந்த சட்டம் வகை செய்கிறது. மேலும் காட்டிக் கொடுத்தவர் பற்றிய விவரத்தை வெளியில் தெரிவித்தாலும், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி மீது இந்தச் சட்டப்படி நடவடிக்கை பாயும். அதே சமயம் ஒன்றுமில்லாத விஷயத்தை ஊதி பெரிதாக்க நினைக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்த சட்டத்தில் இடமுள்ளது. இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் நடப்பு கூட்டத்தொடரிலேயே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.


சில ஆண்டுகளுக்கு முன் தங்க நாற்கர சாலை திட்டத்தில் பெருமளவு ஊழல் நடந்திருப்பதாக புகார் கூறிய தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சத்யேந்திர துபே கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்குப் பிறகு ஊழலை காட்டிக் கொடுப்பவர்களை பாதுகாக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. சட்ட கமிஷனும் பரிந்துரை செய்ததை தொடர்ந்து இந்த மசோதா உருவாக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.





கூடுதலாக மின் கட்டணம் வசூலிக்கும் வீட்டு உரிமையாளருக்கு 3 மாத சிறை

சென்னை : ""வீட்டு வாடகைதாரர்களிடம் விதிமுறைக்கு மாறாக, அதிக மின் கட்டணம் வசூலிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு, ஒரு லட்ச ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறை தண்டனை யும் கிடைக்கும்,'' என, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், சில பரிந்துரைகளைச் செய்தது. இதன்படி மின் பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதனிடையே, வாடகைதாரர்களிடமிருந்து, வீட்டு உரிமையாளர்கள் அதிக மின் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விதிமுறைகளை மீறி அதிக கட்டணம் வசூலித்தால், மூன்று மாத சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வீட்டு உரிமையாளர்கள், வாடகைதாரர்களிடம் கூடுதலாக மின் கட்டணம் வசூலிப்பதாக வெளியாகும் செய்திகள் குறித்து ஆணையம் கவனம் கொண்டுள்ளது. வீட்டின் உரிமையாளர்கள் அதே வளாகத்தில் கூடுதலாக மின் இணைப்பு பெற முடிவு செய்யும்போது, மேம்பாட்டுக் கட்டணம், மின் இணைப்புக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. வாடகைதாரர் நலன் கருதியும், வீட்டு உரிமையாளர்கள் சுமையைக் குறைக்கவும் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையை மீறி, வீட்டின் உரிமையாளர்கள் சிலர், வாடகைதாரர்களிடமிருந்து அதிக மின் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இரண்டு மாதங்களுக்கு 600 யூனிட்டுகளுக்கு மேல் பயன்பாடு இருந்தால், அதிக பட்சமாக யூனிட்டுக்கு 4.05 ரூபாய் மட்டுமே வசூலிக்க முடியும். பயன்பாடு 600 யூனிட்டுக்கு குறைவாக இருந்தால், அளவீட்டைப் பொருத்து ஒரு யூனிட்டுக்கு 2.20, 1.50 ரூபாயும், 80, 70 பைசா மட்டுமே வசூலிக்க முடியும். இதற்கு மேல் மின் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோத செயல். விதிமுறை மீறி கட்டணம் வசூலித்தால், 2003ம் ஆண்டு, மின்சாரத் சட்டம் 142, 146 பிரிவுகளின்படி ஒரு லட்ச ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறை தண்டனையும் விதிக்கத்தக்க குற்றம். இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம், இந்த சட்டப்பிரிவுகளின் கீழ், கோர்ட்டில் புகார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

04 ஆகஸ்ட் 2010

ராணுவ வீரரிடம் 10 ஆயிரம் லஞ்சம் , எஸ்ஐ கைது.


தேசத்திற்காக பாடு பட்ட ஒரு அப்பாவி முன்னாள்ராணுவ வீரனின் உடையை களைய சொன்ன எஸ்ஐ



ஆவடி, ஆக 4


‘கடுமையான பிரிவுகளில் வழக்கு போடாமல் இருக்க, பத்தாயிரம் தர வேண்டும்’ என்று கூறி, மாஜி ராணுவ வீரரிடம் பணம் பறித்த திருமுல்லைவாயல் எஸ்ஐ கைது செய்யப்பட்டார்.


திருமுல்லைவாயல் தந்தை பெரியார்நகர் வெங்கடேசன் தெருவை சேர்ந்தவர் துரைசாமி(58). முன்னாள் ராணுவ வீரர். தற்போது ஐசிஎப்பில் ஏசி மெக்கானிக்காக பணியாற்றுகிறார். இவரது மனைவி தாமஸ்மேரி (48).

இவர்களது எதிர் வீட்டில் வசிக்கும் தம்பதி வடிவேலு, சத்யா.


கடந்த 28&ம்தேதி அப்பகுதியில் மழை பெய்தது. துரைசாமி வீட்டு மாடியில் தேங்கிய தண்ணீரை திறந்துவிட்டபோது அது தெருவில் வழிந்தோடி வந்து வடிவேலு வீட்டருகே தேங்கியதாக தெரிகிறது. இதுசம்பந்தமாக, தாமஸ்மேரிக்கும் சத்யாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


இதுபற்றி வடிவேலு, திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து, துரைசாமியை அழைத்து விசாரணை நடத்திய சப் இன்ஸ்பெக்டர் ஸ்டா ன்லி ஜோன்ஸ் ஏகத்துக்கும் பேசியிருக்கிறார். ‘எக்ஸ் மிலிட்டரின்னா பக்கத்து வீட்டுக்காரன்ட்ட வம்பிழுப்பீ ங்களா? லோக்கல் போலீஸ் பவர பத்தி தெரிஞ்சுக்கணுமா? கன்னாபின்னானு கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவேன்’ என்று கடுமையாக விசாரித்திருக்கிறார். பின்னர், ‘சரி.. சரி.. மிலிட்டரிகாரன மதிக்கணும்னு பாக்கிறேன். இனிமே, மழைத் தண்ணிய வடிவேலு வீட்டுப் பக்கம் போகாம பாத்துக்கங்க.. நான் அவங்கள சமாளிச்சுக்கறேன். பெட்டி கேஸ் போட்டு விட்டுர்றேன். பத்தாயிரம் ரெடி பண்ணிட்டு வாங்க..’ என்கிறரீதியில் விசாரணையை முடித்திருக்கிறார். இதையடுத்து, தகாத வார்த்தையால் பேசியதாக துரைசாமி மீது லேசான பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 10ஆயிரம் ரூபாயை இரண்டு நாட்களில் தந்து விடுமாறு துரைசாமியிடம் எஸ்ஐ சொல்லி அனுப்பியிருக்கிறார்.


லஞ்ச ஒழிப்புதுறை ஐ.ஜி. துக்கையாண்டியின் கவனத்துக்கு இந்தப் பிரச்னையை துரைசாமி கொண்டு சென்றார். ஐ.ஜி. உத்தரவின்பேரில் டிஎஸ்பி பொன்னுசாமி வழக்கு பற்றி துரைசாமியிடம் புகாரைப் பெற்று விசாரித்தார். அதிகாரிகள் கொடுத்த ஐடியாபடி, துரைசாமி ரூ.10 ஆயிரத்துடன் திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்துக்கு நேற்றிரவு 10.30 மணிக்கு வந்தார். இரவு ரோந்து பணிக்கு செல்லத் தயாராக இருந்த சப்&இன்ஸ்பெக்டர் ஸ்டான்லி ஜோன்ஸிடம், ‘சார், நீங்க கேட்ட பணத்த கொண்டு வந்துருக்கேன்’ என்றார்.


‘ஸ்டேஷனுக்கு வெளியில என்னோட பைக் நிக்குது. பைக் கவர்ல பணத்த வச்சுட்டுப் போய்டுங்க..’ என்று எஸ்.ஐ. கூறியிருக்கிறார். எஸ்.ஐ. சொன்னது போலவே, பணத்தை வைத்துவிட்டு நகர்ந்தார் துரைசாமி. சிறிதுநேரத்திலேயே அங்கு வந்த எஸ்ஐ, பணத்தை எடுத்து தனது பாக்கெட்டில் திணித்தார். அப்போது பாய்ந்துவந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், எஸ்ஐயை மடக்கிப் பிடித்து, பணத்தை பறிமுதல் செய்தனர்.


திருவள்ளூர் நீதிமன்றத்தில் இன்று காலையில் எஸ்ஐ&யை ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.


முன்னாள் ராணுவ வீரர் கண்ணீர் :

சாலையில் மழைத் தண்ணீர் ஓடுவது தொடர்பாக என்னுடைய மனைவிக்கும் வடிவேலு மனைவி சத்யாவுக்கும் தகராறு ஏற்பட்டது. வடிவேலு புகார் கொடுத்தார். கடந்த 28ம்தேதி மாலை 5 மணிக்கு திருமுல்லைவாயல் போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். நானும் போனேன். சுமார் 4 மணி நேரம் காக்க வைத்தனர். இரவு 9.30 மணிக்கு பிறகு எஸ்.ஐ. விசாரித்தார்.

வீட்டுப் பெண்களுக்கு இடையே ஏற்பட்ட சின்ன தகராறு. பேசி தீர்த்துக் கொள்ளலாம். நான் நேரடியாக சம்பந்தப்படவில்லை என்று சொல்லிப் பார்த்தேன். நான் சொன்ன எதையும் எஸ்ஐ காதில் வாங்கவே இல்லை. ‘முதல்ல சட்டை, பேன்ட்டை கழற்றிட்டு அப்படி உட்கார்..’ என்று மிகவும் உதாசீனப்படுத்தினார். ராணுவத்தில் பணியாற்றிய என்னை அசிங்கப்படுத்தாதீர்கள் என்று கூறியதோடு, டிரஸ்சையெல்லாம் கழற்ற முடியாது என்று மறுத்து விட்டேன். நான் சொல்கிறபடி கேட்காவிட்டால், கேஸ் போடுவேன். ஐசிஎப்ல வேலை பார்க்க விட மாட்டேன் என்று எஸ்ஐ மிரட்டினார். உனக்கு வாரிசு இல்லாமல் செய்துவிடுவேன் என்றும் அச்சுறுத்தினார். பின்னர் 11 மணிக்கு மேல் வீட்டுக்கு அனுப்பினார்கள்.

மறுநாள் காலையிலும் ஸ்டேஷனுக்கு வர வைத்தார்கள். ‘உன்ன பத்தி விசாரிச்சுட்டேன்.. பென்ஷன் வருது.. ஐசிஎப்லயும் நல்ல சம்பளம்.. பிரச்னை இல்லாம கேச முடிச்சுக்கணும்னா, 10 ஆயிரம் ரூபாய் குடு. லேசா கேஸ் போட்டு வெளில விட்டுர்றேன்’ என்றார்.

இரண்டு நாள் கடும் மன உளைச்சலில் இருந்தேன். பணம் கேட்டதைக் கூட பெரிதாக நினைக்கவில்லை. ஸ்டேஷனில் வைத்து அந்த எஸ்.ஐ. என்னை நடத்திய விதத்தால் பெரிதும் அவமானப்பட்டு விட்டேன். அதனால்தான் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் கொடுத்தேன். இவ்வாறு துரைசாமி கூறினார்.


03 ஆகஸ்ட் 2010

1,000 ரூபாய் லஞ்சம்:கலெக்டரின் நேர்முக பெண் உதவியாளர் கைது


திருச்சி:திருச்சியில் சிறுசேமிப்பு ஏஜன்ட் லைசென்ஸ் புதுப்பிக்க, 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சிறுசேமிப்புத்துறை உதவி இயக்குனர், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த ரவி என்பவரின் மனைவி கனகா, அரசின் சிறுசேமிப்புத்துறை ஏஜன்டாக பணிபுரிகிறார். மூன்றாண்டுக்கு ஒருமுறை, லைசென்சை புதுப்பிக்க வேண்டும்.கடந்த 31ம் தேதியோடு லைசென்ஸ் முடிய உள்ளதால், ஒரு மாதத்துக்கு முன்பே, ஏஜன்ட் லைசென்சை புதுப்பிக்க கனகா, துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.அங்கிருந்து அவரது விண்ணப்பம், திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறுசேமிப்புத்துறை உதவி இயக்குனரின் ஒப்புதலுக்கு வந்துள்ளது.


இதையடுத்து கனகா, நேற்று முன்தினம், திருச்சியில் உள்ள சிறுசேமிப்புத் துறை உதவி இயக்குனர் திலகமணியிடம்(46) விவரம் கேட்டார்.அதற்கு அவர், "500 ரூபாய்க்கான தேசிய சேமிப்பு பத்திரம் ஒன்றும், 1,000 ரூபாயும் லஞ்சம் கொடுத்தால் தான், லைசென்சை புதுப்பிக்க முடியும்' என கூறினார். 500 ரூபாய்க்கான தேசிய சேமிப்பு பத்திரம் வாங்கிக் கொடுத்த கனகா, நாளை வந்து 1,000 ரூபாய் தருவதாகக் கூறி, திருச்சி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார்.


லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி கனகா, நேற்று காலை, சிறுசேமிப்பு உதவி இயக்குனர் திலகமணியிடம் 1,000 ரூபாய் கொடுத்தார். அதை வாங்கும் போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்தனர்.அவரை கைது செய்ததோடு, பொன்னகரில் உள்ள அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தி, பல லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணம், பணம், நகை கைப்பற்றப்பட்டது.திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திலகமணி, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இவர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) என்பது குறிப்பிடத்தக்கது.



02 ஆகஸ்ட் 2010

ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிகள் மூவர் கைது


ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூரில் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் உட்பட, மூன்று அதிகாரிகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெயமணி; எலக்ட்ரிஷியன். இவர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தார். சமீபத்தில் செம்பரம்பாக்கத்தில் தனியார் தொழிற்சாலையில் ஒயரிங் வேலை செய்தார். தொழிற்சாலை நிர்வாகம், கூடுதல் மின்சப்ளை தேவை என, செங்கல்பட்டு மின்வாரிய மேற்பார்வை பொறியாளரிடம் மனு கொடுத்தது. அவர், ஸ்ரீபெரும்புதூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளருக்கு மனுவை பரிந்துரை செய்தார். தொழிற்சாலை நிர்வாகிகள், பரிந்துரை கடிதத்தை ஜெயமணியிடம் கொடுத்து ஸ்ரீபெரும்புதூர் உதவி செயற்பொறியாளரிடமிருந்து சாத்திய அறிக்கை(தொழிற்சாலைக்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது என அளிக்கப்படும் சான்று) பெறும்படி அனுப்பினர்.


ஜெயமணி கடந்த 30ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றார். அங்கு உதவி செயற்பொறியாளராகப் பணிபுரியும் சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி(44) என்பவரை சந்தித்தார். தொழிற்சாலைக்கு சாத்திய அறிக்கை தரும்படி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அளித்த பரிந்துரை மனுவை கொடுத்தார். அதை பெற்றுக் கொண்ட வெங்கடாஜலபதி, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் சாத்திய அறிக்கை தருவதாகக் கூறினார். பணம் தர விரும்பாத ஜெயமணி, காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

டி.எஸ்.பி., விஜயராகவன், இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வன், கங்காதரன், சரவணன், வெங்கடேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர். பின், ரசாயனம் தடவிய 25 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஜெயமணியிடம் கொடுத்து மின்வாரிய அதிகாரியிடம் கொடுக்கும்படி கூறினர். அதை ஏற்று பணத்துடன் நேற்று காலை 11 மணிக்கு ஜெயமணி, பென்னலூர் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றார். அங்கு உதவி செயற்பொறியாளர் வெங்கடாஜலபதி, செம்பரம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றும் திருநின்றவூரைச் சேர்ந்த அருணாசலம்(50) மின்வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராகப் பணிபுரியும் திருவள்ளூரைச் சேர்ந்த பெருமாள்(40) ஆகியோர் இருந்தனர். ஜெயமணி தன்னிடம் போலீசார் கொடுத்த பணத்தை வெங்கடாஜலபதியிடம் வழங்கினார். அவர் பணத்தை பெற்றுக் கொண்டார். அந்தப் பணத்தில் அருணாசலத்திற்கு 5,000, பெருமாளுக்கு 1,000 ரூபாய் வழங்கினார். அவர்களும் பெற்றுக் கொண்டனர். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், மூன்று பேரையும் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். ஒரே நேரத்தில் லஞ்சம் வாங்கிய மூன்று மின்வாரிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டது மின் ஊழியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.