விருதுநகர்: விருதுநகரில் 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் உதவி மேலாளர் செல்வம், மேற்பார்வையாளர் ஜெகநாதனை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் டாஸ்மாக் கடை விற்பனையாளராக இருந்த ராமகிருஷ்ணன். பீர் பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் கூடுதலாக வாங்கியது தொடர்பாக, இவரை மாவட்ட மேலாளர் செம்புக்குட்டி சஸ்பெண்ட் செய்தார். மீண்டும் தன்னை பணியில் சேர்க்கக் கோரி, விருதுநகரிலுள்ள டாஸ்மாக் அலுவலகத்துக்கு நேற்று மதியம் ராமகிருஷ்ணன் வந்தார். அவரை அணுகிய உதவி மேலாளர் செல்வம்(54), 2,000 ரூபாய் கேட்டார். இது குறித்து ராமகிருஷ்ணன், விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் ரசாயனம் தடவிக் கொடுத்த 2,000 ரூபாயை நேற்று மாலை 6 மணியளவில் டாஸ்மாக் அலுவலகத்திலிருந்த செல்வத்திடம் கொடுத்தார். அவர் பணத்தை வாங்காமல், அங்கு வேலைபார்க்கும் சிவகாசி பார் மேற்பார்வையாளர் ஜெகநாதனிடம்(39) கொடுக்கச் சொன்னார். ராமகிருஷ்ணனும், ஜெகநாதன் இருந்த அறைக்குச் சென்று அவரிடம் பணத்தை கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சியாமளாதேவி, இன்ஸ்பெக்டர்கள் சாமிநாதன், கணேஷ்தாஸ் ஆகியோர் பணத்தைக் கைப்பற்றினர். உதவி மேலாளர் செல்வம், மேற்பார்வையாளர் ஜெகநாதன் இருவரையும் கைது செய்தனர்.
06 ஆகஸ்ட் 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக