புதியவை :

Grab the widget  Tech Dreams

17 அக்டோபர் 2009

லஞ்சம் வாங்கிய புகாரில் அரசு ஊழியர்கள் 100 பேர் கைது ,லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரம்



மிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும், அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய வேட்டையில் இதுவரை 100 பேர் வரை லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், உயர் பொறுப்பில் இருந்து ஊழல், முறைகேடு செய்த பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

"லஞ்சம் கொடுப்பதும் குற்றம்; லஞ்சம் வாங்குவதும் குற்றம்' என்ற வாசகம், அரசுத்துறைகள் இயங்கிய காலம் முதல் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், "காசு இல்லையென்றால் காரியம் நடக்காது' என்ற நிலைதான் அரசுத்துறைகளில் தொடரும் அவலம். போலீஸ் துறை, மின் வாரியம், வருவாய்த்துறை, நெடுஞ்சாலை, செய்தி மக்கள் தொடர்பு, ஊரக வளர்ச்சி, போக்குவரத்து உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அரசுத்துறைகள் உள்ளன. அரசை சார்ந்தே மக்கள் இருக்க வேண்டிய நிலை உள்ளதால், தங்களது தேவைகளுக்கு அதிகாரிகளை சந்திக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.



சாதாரண ரேஷன் கார்டு முதல், பெரிய அளவிலான தொழிற்சாலை அனுமதி வரை அனைத்து பைல்களும் தடையின்றி செல்ல லஞ்சம் வழங்க வேண்டிய நிலை உள்ளது. ஒருசில அதிகாரிகளால், அத்துறை சார்ந்த மற்ற அதிகாரிகளுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. லஞ்சத்தைத் தடுப்பதற்கு என்றே லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளது. இந்த துறை நடத்திய வேட்டையில், தமிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும் 100 பேர் வரை லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவை தவிர, உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஊழல், முறைகேடு செய்து அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.



மத்திய, மாநில அரசுகள் ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தி உள்ளன. அவை தவிர ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப் படுகிறது. "அரசு ஊழியர்கள் காட்டில் மழை' என்று பொதுமக்கள் மூக்கு மீது விரல் வைத்தாலும், இது போதாது எனக் கூறி அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர் வரை சிலர் மறைமுக லஞ்ச வேட்டையில் ஈடுபட்டு தான் வருகின்றனர்.மக்களிடையே தற்போது ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, லஞ்சம் கேட்கும் அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் மாட்டிவிடும் பக்குவத்தை ஏற்படுத்தி உள்ளது. இடமாற்றம், பதவி உயர்வுக்காக மேல் அதிகாரிக்கு கொடுத்த லஞ்சத்தை, மக்களிடம் இருந்து வசூல் செய்து விடலாம் என்ற நோக்கில் கையை நீட்டி மாட்டிக் கொள்வதும், அரசுக்கு வரும் வருவாயை தன் வங்கிக் கணக்கில் சேர்ப்பதாலும் போலீசாரால் கைவிலங்கு பூட்டும் நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.




3 கருத்துகள்:

  1. கைது செய்யபட்டவர்கள் இன்னமும் சிறையில் இருக்கிறார்களா அல்லது லஞ்ச பணத்தையே லஞ்சமாக கொடுத்து வெளியே உலாவிகொண்டிருக்கிறார்களா? என்று விளக்கினால் நலம்.

    பதிலளிநீக்கு
  2. பெரம்பலூர் : இறப்பு சான்றிதழ் பெற்றுத்தர ரூ. 60 லஞ்சம் வாங்கிய பதிவு எழுத்தருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் தலைமை குற்றவியல் நடுவர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் திருவளக்குறிச்சியைச் சேர்ந்த சின்னையன் என்பவர், தனது மனைவி பார்வதியின் இறப்பு சான்றிதழைப் பெற குன்னம் தாலுகா அலுவலகத்தில் மனு செய்திருந்தார். அங்கு பணியாற்றும் பதிவு எழுத்தர் சந்திரசேகர் என்பவர், அந்த சான்றிதழை பெற்றுத்தர ரூ. 60 லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க மனமில்லாத சின்னையன், இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். அவர்களது ஆலோசனையின் படி, சின்னையன் பணம் தர அதைப்பெற்றுக்கொண்ட சந்திரசேகர் மற்றும் அவரது உதவியாளர் வெங்கடாசலம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு பெரம்பலூர் தலைமை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி சரோஜினி இன்று தீர்ப்பு வழங்கினார். இதன்படி சந்திரசேகருக்கு ஒன்றரை ஆண்டுகளும், வெங்கடாசலதிற்கு ஓராண்டும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. பட்டா வழங்க லஞ்சம் எழுத்தருக்கு 3 ஆண்டு சிறை

    ஸ்ரீவில்லிபுத்தூர்: பட்டா வழங்க 300 ரூபாய் லஞ்சம் வாங்கிய ராஜபாளையம் தாசில்தார் அலுவலக எழுத்தருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து முதன்மை குற்றவியல் நீதிபதி முருகாம்பாள் தீர்ப்பளித்தார்.
    ராஜபாளையத்தை சேர்ந்தவர் சேதுராஜ். இவருக்கு சொந்தமான திருவேங்கடபுரத்திலுள்ள காலி இடத்திற்கு பட்டா வேண்டி ராஜபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். விண்ணப்பத்தை தாசில்தார் பார்வைக்கு அனுப்புவதற்கு அலுவலக எழுத்தர் வெங்கடேசன் 300 ரூபாய் லஞ்சமாக கேட்டார். லஞ்சப்பணத்தை 2003 செப்.15ம் தேதி சேதுராஜ் கொடுக்கும் போது பிடிபட்டார். இது தொடர்பான வழக்கு முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முருகாம்பாள் லஞ்சம் வாங்கிய வெங்கசேடனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    பதிலளிநீக்கு