புதியவை :

Grab the widget  Tech Dreams

24 ஜூன் 2010

தந்தையை தவிக்கவிட்டதாக மகன் கைது.


சென்னை: ஒரு நேர சாப்பாட்டிற்கு கூட உதவாமல், 83 வயதான தந்தையை தவிக்கவிட்ட மூத்தமகனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது மூத்தோர் குடிமக்கள் பராமரிப்பு சட்டம் பாய்ந்தது.


சென்னை, பட்டாளம் டிமல்லர்ஸ் சாலையில் வசிப்பவர் முத்துக்கிருஷ்ணன் (83). இவருக்கு குமார், சேகர், கமலக்கண்ணன் என்ற மூன்று மகன்களும், பத்மினி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி, குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இரண்டாவது மகன் தந்தைக்கு பணஉதவி செய்து, மூன்றாவது மகன் மாத வாடகைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தும் உதவி வருகின்றனர். ஆனால் மூத்த மகன் குமார், இரண்டு ஆண்டுகளாக எந்த உதவியும் செய்யாமல் இருந்து வந்தார். முத்துக்கிருஷ்ணன் பலமுறை நேரில் சந்தித்து கேட்டும் உதவ மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த முத்துக்கிருஷ்ணன், நேற்று முன்தினம் அயனாவரம் போலீசில் புகார் செய்தார்.


முத்துக்கிருஷ்ணன் கொடுத்த புகாரில் கூறியதாவது: எனக்கு 83 வயதாகிறது. எனது மூன்று மகன்களில், இரு மகன்கள் உதவி செய்து வருகின்றனர். மூத்த மகன் குமார், அச்சகம் ஒன்றில் பார்ட்னராக உள்ளான். ரயில்வேயில் ஒப்பந்த வேலைகள் எடுத்து பார்க்கிறார். நல்ல வருமானத்துடன் வசதியாக வாழ்ந்து வருகிறான். கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த உதவியும் செய்யவில்லை. மகனிடம் மன்றாடி கேட்டும் எந்த பயனும் இல்லை. எனவே போலீசில் புகார் செய்தேன். இவ்வாறு முத்துக்கிருஷ்ணன் கூறினார்.


இதுகுறித்து அயனாவரம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிந்து, வயதான தந்தையை தவிக்கவிட்ட மகன் குமாரை (55), மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தார். கைதான குமார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். முதியவர் கொடுத்த புகார் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, மகனை கைது செய்த இன்ஸ்பெக்டர் ரமேஷை, கூடுதல் கமிஷனர் ஷகீல் அக்தர் உள்ளிட்ட அதிகாரிகள் பாராட்டினர். சென்னையில், தந்தையை தவிக்கவிட்டதாக மகன் கைதாவது இதுவே முதல் முறை. இந்த நடவடிக்கை தொடருமென போலீசார் எச்சரித்துள்ளனர்.



1 கருத்து:

  1. kodumai......

    உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
    தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது
    http://rkguru.blogspot.com/2010/06/blog-post_24.html

    பதிலளிநீக்கு