புதியவை :

Grab the widget  Tech Dreams

29 ஏப்ரல் 2010

ரூ.340 கோடி மோசடியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி கைது .



புதுடில்லி : ரூ.340 கோடி கலால் வரி மோசடி வழக்கில், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியும் மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலருமான ரவியும், அவரது கூட்டாளியும் கைது செய்யப்பட்டனர். ரவியை நான்கு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, டில்லி கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

கலால் வரி செலுத்தாமல் 340 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்தது தொடர்பாக, ராயல் மதுபான நிறுவன உரிமையாளர் அசோக் கீமானி மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள் மூன்று பேரை, நேற்று முன்தினம் இரவு சி.பி.ஐ., போலீசார் கைது செய்தனர்.

இவர்களில் கீமானி டில்லியிலும், மற்ற மூன்று பேர் டாமனிலும் கைது செய்யப்பட்டனர். டாமனில் உள்ள கலால் வரித் துறை அதிகாரிகளுடன் சேர்ந்து, பல கோடி ரூபாய் அளவுக்கு கலால் வரி மற்றும் 'வாட்' வரி மோசடி செய்துள்ளார் கீமானி. இது மட்டுமின்றி, கோவா, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவிலும் சட்ட விரோதமான வகையில், மதுபானங்களை விற்றுள்ளனர். இதன் மூலம் 340 கோடி ரூபாய், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளனர்.


இந்நிலையில், டாமனின் தற்போதைய நிர்வாக அதிகாரியை மாற்றுவதற்காக, மதுபான நிறுவன உரிமையாளர் ஒருவரிடம் இருந்து 25 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றது தொடர்பாக, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், மத்திய உள்துறை அமைச்சகத்தில் பேரிடர் மேலாண்மை பிரிவின் இணைச் செயலராக இருப்பவருமான ரவியும் நேற்று சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.


ரவியை சஸ்பெண்ட் செய்யும்படி, மத்திய பணியாளர் நலத்துறையையும் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் அவரது கூட்டாளியான ராகேஷ் ரத்தோகி என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ரவியின் கைதைத் தொடர்ந்து, அவரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களிலும், அவரது கூட்டாளியான ராகேஷ் ரத்தோகி வீட்டிலும் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர். பின்னர் ரவியும், அவரது கூட்டாளியும் டில்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நான்கு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, டில்லி கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக